Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நேசமணியை உலகளவில் டிரெண்ட்டாக்கியவர் வீடியோ வெளியீடு: என்ன சொல்கிறார்?

மே 30, 2019 07:20


உலக அளவில் சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணியை டிரெண்ட்டாக்கியவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது.

இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார். 

அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். 

அந்த குறும்புக்கார நெட்டிசன் தற்போது இது குறித்து வீடியோ ஒன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் விக்னேஷ் பிரபாகர். ஒரே நாளில் கமெண்ட்டினால் புகழ்ப்பெற்ற நேசமணி பிரபாகர் நான்தான். விளையாட்டாக பதில் கூறினேன். உலக அளவில் டிரெண்ட்டாகும் என தெரியாது. சத்தியமாக இதுபோன்று நினைத்துப் பார்த்ததில்லை. செல்போன் ஹேங் ஆகும் அளவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் துபாயில் பணிபுரிகிறேன். என்னால் டிவி பார்க்க முடியாது. ஊரில் இருப்பவர்கள், டிவிகளில் ஒளிபரப்புவதை எனக்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்பி வைக்கின்றனர். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 

வடிவேலு சாருக்கு மிக்க நன்றி. சுத்தியல் என்றதும் ப்ரண்ட்ஸ் படம்தான் நியாபகம் வந்தது. அதில் வரும் டங், டங் சவுண்ட் எனக்கு திடீரென தோன்றியது. அதனை கூறினேன். இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமளிக்கிறது. 

இண்டர்நெட்டின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் இதன்மூலம் எனக்கு நன்கு புரிந்தது. கமெண்ட்டிற்கு ஏதோ  10 பேர் லைக் செய்வார்கள் என்றுதான் நினைத்தேன். வேறு எந்த பிளானும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

தலைப்புச்செய்திகள்